வாசியோகப் பாடல் : 1
சிவகுருவே சரணம் !
நானுரைக்கும் வார்தைதனில் மெய்யுண்டு
என்பதறிய காலம்பல வேண்டுமென,
அக்காலம்வர படிகள்பலகட உன்னுள் ஓடும்
பொய்மையால் மறைக்கப்பட்டு நீ வெளியேற.
வழிநடத்தும் உள்ளெண்ணமதனை அடக்கியாளு
அதன்வலிமை தனையான் தருவேன்
வலிமையாம் அனைத்திலும் பொறுமையே !
என்றுமறை பொருளாய்யுணர்த்தி யருளிய
எம்குருவாய் சிவகுருவிற்கு நன்றியல்ல
எம்முயிர் துடிப்பும் சமர்ப்பிக்கலானேனே !
மறைந்த ஒளிக்கும் உயிரூட்டும் காலைநம்மில்
கூட்டும் கலையாம் வாசியோகம் !
நல்வாழ்வை வழுக்கும் கலியுக வழக்கை
களையும் கலையாம் வாசியோகம் !
காலால் தோன்றிடுமாற்ற மனைத்தும் நம்மிலூரிடும்
ஊற்றாயமைக்கும் கலையாம் வாசியோகம் !
பிணியென்னும் நோய்பற்றி யும்மைதுன்புறுத்தும்
ஆழதனில் தானுண்டுயும்மை சீர்செய்யும்
வழிதனுமாய் நாவடக்கம் பணிவடக்கம்
கால்புகுத்தும் நெறியடக்கம் இவையனைத்தும்
உட்புகும் பொறுமைதனும் உன்னுள்
வெளிக்கொணர்வார் சிவனறம் உள்என
எம்குருவருளாய் ‘சிவசித்தன்’ காலதனால்.
*************************
சிவகுருவே சரணம் !
நாட்கள் பலவுன்னில் வேண்டும்
துயிலிலிருந்து உன்னை எழுப்ப
அத்துனை பொழுதும் குருநாதனுண்டு
உனக்காக உன்னை காக்க
அத்துனை பொழுதிலும் தானுனக்கு
வேண்டும் பொறுமை எனும் முதலுதவியே !
வாதம் பித்தம் கபமனைத்தும் நோயல்ல
நாம் மறந்து வெளியேற்றா கழிவதனால்
உயிர்பெற்ற துடிப்படைக்கும் தீயவையாய்
யமையும் சுவாசனவன் அவனைக்
கண்டஞ்சி நாம்பதற்றுற்று மருந்தேற்றி
நாம்நம்மை கொன்றுள்ளோம் என்பதனை
உணர்ப்பிக்கவும், அதனுள்ளிருந்து மீட்டெழவும்
வழிதனில் வாழ்வருளி நமதுடலுயிரை
மெய்யூட்டி புதுப்பித்தருளினரே எம்குருவாம்
சிவன்தொண்டர் “சிவசித்தர்” காலதனால் !
*************************
சிவகுருவே சரணம் !
காலத்தின் வழிகளையும் வலிகளையும் செதுக்கி
வாழ்க்கையின் புதுமையும் புலமையையும் புகுத்தி
ஞானத்தின் வார்ப்பையும் பார்ப்பையும் நிரப்பி
மனத்தில் இன்பத்தையும் நிறைவையும் பரப்பி
புத்துயிர் ஊட்டுமாம், ‘சிவகுரு’ ‘சிவசித்தர்’
அளிக்கும் வாசியோகம் ! சிவசித்தரின் வாசியோகம் !
சிவகுருவே சரணம் !
மும்மூன்று கோல்தனையும் செயலற்றதென்றாக்கி
மூவிரண்டு கூட்டானபூதமதனை தன்கைபாவையாக்கி
மூவிலிரண்டு கழிந்ததொருவராம் ‘சிவகுரு’நாதராம்
முக்காலத்தை யுணர்ந்துகடந்த ‘சிவசித்தரவர்’
முக்கண்ணனையும் தன்னில்வெளிக்காட்டும் சிவக்கண்ணன்
முத்தமிழ் பெற்ற மாமதுரைதனில் சிவலோக சிந்தாமணி.
– க. முகேஷ்.